அரசு மருத்துவர்கள் இடமாறுதல் தொடர்பான வழக்கு: மருத்துவ கல்வி இயக்குநர் செப்.4-ல் ஆஜராக உத்தரவு

அரசு மருத்துவர்கள் இடமாறுதல் தொடர்பான வழக்கு: மருத்துவ கல்வி இயக்குநர் செப்.4-ல் ஆஜராக உத்தரவு
Updated on
1 min read

அரசு மருத்துவர்கள் இடமாறுதல் தொடர்பான அவமதிப்பு வழக்கில் மருத்துவ கல்வி இயக்குநர், செப்டம்பர் 4-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஆண்டு அக். 25முதல் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 118 மருத்துவர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு தடை கோரி பாதிக்கப்பட்ட அரசுமருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், “போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்துக்காக அரசுமருத்துவர்களை தொலைதூர மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்தும், அவர்களை சாதாரண பதவியில் அமர்த்தியும் பழிவாங்கக்கூடாது” என்று உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சில மாதத்துக்குப் பிறகு அரசு மருத்துவர்கள் மீண்டும் பழைய இடங்களுக்கு மாற்றப்பட்ட நிலையில், குறிப்பிட்ட சிலரை மட்டும் ஏற்கெனவே பணிபுரிந்த இடங்களுக்கு மாற்றாமல், அருகிலுள்ள மாவட்டங்களுக்கு அரசு இடமாற்றம் செய்துள்ளது.

இந்நிலையில் செய்யது தாஹிர்ஹூசைன் என்ற மருத்துவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், திருவண்ணாமலைக்கு இடமாறுதல் செய்யப்பட்ட தன்னை 8 மாதங்களுக்குப்பிறகு மீண்டும் மதுரைக்கே பணியிட மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டு இருப்பதாகவும், ஆனால் மூத்த மயக்கவியல் நிபுணரான தன்னை ஜூனியர்களுடன் சேர்ந்து பணிபுரியும் வகையில் அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கவுதமன் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் அரசு தரப்பில்பதில்மனு தாக்கல் செய்யாமல் காலதாமதம் செய்வது ஏன் என புரியவில்லை. அரசு மருத்துவர்களின் இடமாறுதல் உத்தரவை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபிறகும், அவர்கள் மீது பழிவாங்கும் ரீதியில் நடவடிக்கை எடுக்கக்கூடாது என அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், இதுதொடர்பாக மருத்துவகல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபு செப்.4 அன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in