Published : 28 Aug 2020 09:38 PM
Last Updated : 28 Aug 2020 09:38 PM
வசந்தகுமார் எம்.பி. மரணமடைந்ததைத் தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள அவரது எம்.பி. அலுவலகத்தில் அவரது படத்திற்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து காங்கிரஸ் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல் அவரது மரண செய்தி அறிந்ததுமே கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கொடி அனைத்தும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.
வசந்தகுமாரின் உடலை அவரது சொந்த ஊரிலேயே அடக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் பிரமுகர்கள், மற்றும் சொந்த கிராமமான அகஸ்தீஸ்வரம் பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து வசந்தகுமாரின் மகன்களுடன் காங்கிரஸ் பிரமுகர்கள் பேசினர். எனவே கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் குமரி அனந்தன் தெருவில் உள்ள வசந்தகுமாரின் குடும்ப கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக காங்கிரஸ் பிரமுகர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து குமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்; குறுகிய காலத்தில் நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைக்காக அதிக கேள்விகள் எழுப்பியவர் என்ற பெருமை பெற்றவர் வசந்தகுமார் எம்.பி.
அதுமட்டுமின்றி தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமை பெற்றவர்.
அவர் கரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களை மாவட்டம் முழுவதும் சந்தித்து தனது உடல் நிலையைப் பாராமலும் சொந்த நிதியில் உதவினார்.
தற்போது அவரே கரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பதால் குமரி காங்கிரஸார் மட்டுமின்றி மாவட்ட மக்களே சோகத்தில் ஆழ்ந்துள்ளோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT