தென்காசி விவசாயி கொலையை சிபிசிஐடி விசாரிக்கக் கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

தென்காசி விவசாயி கொலையை சிபிசிஐடி விசாரிக்கக் கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

தென்காசியில் வனத்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விவசாயி உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரிய மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்காசி வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் அணைக்கரை முத்து. இவர் தனது தோட்டத்தில் மின் வேலி அமைத்துள்ளார். இது தொடர்பாக வனத்துறையினர் அணைக்கரை முத்துவை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். திடீரென அணைக்கரை முத்து உயிரிழந்தார்.

அவரது மனைவி பாலம்மாள், வனத்துறையினர் தாக்கியதில் கணவர் இறந்துள்ளார். கணவர் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவும், உரிய இழப்பீடு வழங்கவும் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர், தலைமை அரசு வழக்கறிஞர் வாதிட அவகாசம் கேட்கப்பட்டது.

மனுதாரர் வழக்கறிஞர் ஹென்றி டிபேன் தரப்பில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு அறிவித்த நிவாரணம் கிடைக்கவில்லை என்றார். அதற்கு அரசு வழக்கறிஞர், நிவாரண நிதிக்கான காசோலை தயாராக உள்ளது. வாரிசு பிரச்சினையால் நிவாரண நிதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது என்றார்.

பின்னர் மனு தொடர்பாக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.16-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in