புதுச்சேரியில் புதிதாக 511 பேருக்குக் கரோனா தொற்று: மேலும் 8 பேர் உயிரிழப்பு; இறப்பு எண்ணிக்கை 180 ஆக உயர்வு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
2 min read

புதுச்சேரியில் இன்று 511 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், புதுச்சேரியில் 5 பேர், காரைக்காலில் ஒருவர், ஏனாமில் 2 பேர் என 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மேலும், இறந்தவர்கள் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஆக.26) கூறும்போது, "புதுச்சேரியில் நேற்று 1,296 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது புதுச்சேரியில் 425 பேர், காரைக்காலில் 28 பேர், ஏனாமில் 53 பேர், மாஹேவில் 5 பேர் என 511 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்
சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்

மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கருவடிக்குப்பம் சண்முகாபுரம் செந்தமிழ் வீதியைச் சேர்ந்த 67 வயது முதியவர் ஜிப்மரிலும், கருவடிக்குப்பம் மேஜர் சரவணன் நகரைச் சேர்ந்த 74 வயது முதியவர், புதுச்சேரி பாரதி வீதியைச் சேர்ந்த 81 வயது முதியவர், அரும்பார்த்தபுரம் மெயின் ரோட்டைச் சேர்ந்த 60 வயது முதியவர், பெரிய காலாப்பட்டு சோலை வீதியைச் சேர்ந்த 87 வயது முதியவர் ஆகிய 4 பேரும் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மேலும், காரைக்கால் என்எஸ்ஆர் பிள்ளை வீதியைச் சேர்ந்த 71 வயது முதியவர் இறந்த நிலையில் காரைக்கால் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். அவருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்தபோது கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதேபோல், ஏனாம் அன்யம் கார்டன் பகுதியைச் சேர்ந்த 69 வயது முதியவர், ஏனாம் தரியல திப்பா பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவர் ஆகிய இருவரும் தொற்றால் பாதிக்கப்பட்டு ஏனாம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.51 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 11 ஆயிரத்து 930 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் புதுச்சேரியில் 2,065 பேர், காரைக்காலில் 57 பேர், ஏனாமில் 28 பேர் என 2,150 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,872 பேர், காரைக்காலில் 149 பேர், ஏனாமில் 86 பேர், மாஹேவில் 7 பேர் என மொத்தம் 2,114 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,264 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று புதுச்சேரியில் 186 பேர், காரைக்காலில் 5 பேர், ஏனாமில் 22 பேர் என மொத்தம் 213 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,486 (62.75 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 67 ஆயிரத்து 301 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 53 ஆயிரத்து 950 பரிசோதனைகள் முடிவில் 'நெகட்டிவ்' என்று வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in