

திமுக முன்னாள் எம்எல்ஏ நயினா முகமது காலமானார். அவருக்கு வயது 73.
தென்காசி மாவட்டம், கடையநல்லூரைச் சேர்ந்தவர் நயினா முகமது. 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2001-ம் ஆண்டு திமுக சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் அதிருப்தியில் இருந்த அவர், 2004-ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
அதிமுகவின் மாவட்ட சிறுபான்மை பிரிவு மற்றும் எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்து வந்தார்.
சமீபத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் அதிமுக வாக்களித்ததைக் கண்டித்து அதிமுகவில் இருந்து விலகினார்.
இந்நிலையில், இன்று அதிகாலையில் நெஞ்சுவலி ஏற்பட்டதால் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. ஆம்புலன்ஸில் ஏற்றியதும் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவரது உடல் கடையநல்லூருக்கு கொண்டுசெல்லப்பட்டது.
அதிமுக மற்றும் திமுக பிரமுகர்கள், பொதுமக்கள் நயினா முகமது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கடையநல்லூர் பேட்டை பகுதியில் உள்ள காதர் மைதீன் பெரிய குத்பா பள்ளிவாசல் மையவாடியில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.