புதுச்சேரியில் ஒரே நாளில் புதிய உச்சமாக 571 பேருக்குக் கரோனா தொற்று: மேலும் 8 பேர் உயிரிழப்பு; 170-ஐக் கடந்த இறப்பு எண்ணிக்கை  

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
2 min read

புதுச்சேரியில் இன்று புதிய உச்சமாக 571 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், புதுச்சேரியில் 5 பேர், காரைக்காலில் 2 பேர், ஏனாமில் ஒருவர் என 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தையும், இறந்தவர்கள் எண்ணிக்கை 170-ஐயும் கடந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஆக.25) கூறும்போது, "புதுச்சேரியில் 1,327 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 529 பேர், காரைக்காலில் 36 பேர், ஏனாமில் 6 பேர் என 571 பேருக்குத் (43.03 சதவீதம்) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, பரிசோதனை செய்யப்பட்ட நூறு பேரில் 43 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்
சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்

மேலும், புதுச்சேரியில் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். முத்தியால்பேட்டை செந்தாமரை நகர் காந்தி வீதியைச் சேர்ந்த 75 வயது முதியவர், நைனார்மண்டபம் மூகாம்பிக்கை நகர் 5-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த 50 வயது ஆண், மூலக்குளம் 8-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த 62 வயது முதியவர் ஆகிய மூவரும் ஜிப்மரிலும், கவுண்டன்பாளையம் அம்பாள் நகர் 4-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த 55 வயது பெண் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரிகளிலும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.

இதேபோல், காரைக்கால் காமராஜர் நகரைச் சேர்ந்த 61 வயது முதியவர், காரைக்கால் மீராபள்ளி தோட்டத்தைச் சேர்ந்த 73 வயது முதியவர் ஆகிய இருவரும் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையிலும், ஏனாம் பிடிகொண்டல வீதியைச் சேர்ந்த 55 வயது ஆண் நபர் ஏனாம் அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.51 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 11 ஆயிரத்து 426 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் புதுச்சேரியில் 1,975 பேர், காரைக்காலில் 57 பேர், ஏனாமில் 42 பேர் என 2,074 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,735 பேர், காரைக்காலில் 127 பேர், ஏனாமில் 43 பேர், மாஹவில் 2 பேர் என மொத்தம் 1,907 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 3,981 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று புதுச்சேரியில் 314 பேர், காரைக்காலில் 1 ஒருவர், ஏனாமில் 16 பேர் என மொத்தம் 331 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 7,273 (63.65 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 65 ஆயிரத்து 769 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 52 ஆயிரத்து 857 பரிசோதனைகள் முடிவில் 'நெகட்டிவ்' என்று வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in