

விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் சிலை நிறுவ வேண்டாம் என இந்து அமைப்பினரிடம் காவல் ஆணையர் வலியுறுத்திஉள்ளார்.
விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் இந்து அமைப்புகள், தனியார் அமைப்பினர், ஊர் பொது மக்கள் என பல தரப்பினரும் பொது இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடுவது வழக்கம்.
விநாயகர் சதுர்த்தி அன்று பூஜைக்காக வைக்கப்படும் சிலைகள் சென்னை பட்டினப்பாக்கம், நீலாங்கரை. திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட இடங்களுக்கு மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுவது வழக்கம். இதற்காக காவல் துறையிடம் சம்பந்தப்பட்ட அமைப்பினர் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
ஊரடங்கு உத்தரவு
தற்போது, கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும், மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாடுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதையடுத்து விநாயகர் சதுர்த்தியை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாடுங்கள் என முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
ஆலோசனைக் கூட்டம்
இருப்பினும் சில அமைப்பினர் தடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்துவோம் என அறிவித்திருந்தனர். இதையடுத்து இந்துஅமைப்பினர்களுடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல்ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் இந்து முன்னணி, சிவசேனா, பாரத் இந்து முன்னணி, இந்து மகா சபா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இந்து அமைப்பினர் கலந்து கொண்டனர். அவர்கள் வழக்கம்போல விநாயகர் சிலை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்கவும் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் வேண்டாம். வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தி பண்டிகையைக் கொண்டாடுங்கள் என காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். கூட்டத்தில் கூடுதல் காவல் ஆணையர்கள் ஆர்.தினகரன் (தென் சென்னை), ஏ.அருண் (வட சென்னை), கண்ணன் (போக்குவரத்து) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.