

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை இழந்ததால்தான், திமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டதாகக் கூறுவது தவறு எனவும், ஆரம்பம் முதல் தற்போது வரை அரசு அறுதிப் பெரும்பான்மையுடன் இருப்பதாகவும் தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
சட்டப்பேரவைக்கு குட்கா கொண்டு வந்த விவகாரம் தொடர்பான உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 21 எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கு, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வில் இன்று (ஆக.13) இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், பெரும்பான்மைக் குறைவாக இருந்ததால்தான் திமுகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் 21 பேருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டதாகக் கூறுவது தவறு எனவும், ஆரம்பம் முதல் இதுநாள் வரை அரசு எந்தத் தருணத்திலும் பெரும்பான்மையை இழக்கவில்லை எனவும் உரிய விளக்கங்களோடு எடுத்துரைத்தார்.
தற்போதைய நிலையில்கூட சட்டப்பேரவை உறுப்பினர்கள் 124 பேரின் ஆதரவு அரசுக்கு உள்ளதாகவும், பேரவையில் தொடர்ந்து பெரும்பான்மையோடு செயல்படுவதாகவும் சுட்டிக்காட்டிய அவர், அவையின் மாண்பை அவமதிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருளை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்ததற்காகவே திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 21 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சபாநாயகர் உரிமைக்குழு விசாரணைக்குப் பரிந்துரைத்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து ஆஜரான தமிழக அரசின் சிறப்பு மூத்த வழக்கறிஞர் சோமையாஜி, உரிமைக்குழு இந்தப் பிரச்சினை மீது எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் முன்கூட்டியே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சபையின் கண்ணியத்தை மீறும் வகையில், தடை செய்யப்பட்ட பொருளைக் கொண்டு வந்தது, உரிமை மீறலா, இல்லையா என ஆய்வு செய்யவே சபாநாயகர் இந்த விவகாரத்தை உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைத்ததாகவும் வாதிட்டார்.
இந்தப் பிரச்சினை ஏற்கெனவே பலமுறை சட்டப்பேரவையில் எழுப்பப்பட்டு, அரசு சார்பில் உரிய பதிலும் அளிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், அரசியல் சாசனப் பதவியை வகிக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அவையின் கண்ணியத்தைக் காக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதிட்டார்.
அவரது வாதம் முடிவடையாததால், விசாரணை நாளைக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.