

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்க வேண்டும் என, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
மதுரை அருகே பரவையில் நேற்று (ஆக.10) செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, 2021 சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி அதிமுக நிர்வாகிகள் புயல் வேகத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தொண்டர்கள் வெற்றியுடன் தேர்தல் பணியாற்றி வருகிறார்கள் என்றும், அதிமுகவை இரு தலைவர்கள் வழிநடத்துவதால், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூடி யாரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவரே அடுத்த முதல்வர் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்திருந்தார்.
அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூடி முதல்வரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்றும், இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
இந்நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூவின் கருத்துக்கு மாறுபட்டு பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்துத் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை முதல்வராக முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று (ஆக.11) தன் ட்விட்டர் பக்கத்தில், "எடப்பாடியார் என்றும் முதல்வர்!
இலக்கை நிர்ணயித்துவிட்டு
களத்தைச் சந்திப்போம்!
எடப்பாடியாரை முன்னிறுத்தி
தளம் அமைப்போம்!
களம் காண்போம்!
வெற்றி கொள்வோம்! 2021-ம் நமதே!" எனப் பதிவிட்டுள்ளார்.