கரோனா தொற்று: பிரணாப் முகர்ஜி உடல் நலம் தேற ஸ்டாலின் வாழ்த்து

கரோனா தொற்று: பிரணாப் முகர்ஜி உடல் நலம் தேற ஸ்டாலின் வாழ்த்து
Updated on
1 min read

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நலம்பெற திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தீவிரமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்களும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர்கள் அமித் ஷா, அர்ஜுன் ராம் மேக்வால், தர்மேந்திர பிரதான், விஸ்வாஸ் சாரங், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பி.ஸ்ரீராமுலு, கர்நாடக வேளாண் அமைச்சர் பி.சி.பாட்டீல், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பிரணாப் முகர்ஜி ட்விட்டர் பதிவு:

“ வேறு ஒரு தனி நடைமுறைக்கு மருத்துவமனைக்குச் சென்றபோது நான் கரோனா பரிசோதனை செய்துகொண்டேன். அதில் எனக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஆதலால், கடந்த வாரத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு, பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்”.

எனத் தெரிவித்திருந்தார்.

பிரணாப் முகர்ஜி விரைவில் குணமடைய காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள், பல்வேறு மூத்த தலைவர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினும் அவர் குணம்பெற வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரது ட்விட்டர் பதிவு:

“பிரணாப் முகர்ஜி கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து விரைந்து மீண்டு முழு உடல்நலன் பெற்றிட விழைகிறேன்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in