

வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக ஆன்லைனில் விளம்பரம் செய்து பண மோசடியில் ஈடுபட்ட பெண் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
வெட்டுவாங்கேணியைச் சேர்ந்தவர் அசோக்ராஜ் (30). இவர் தனது வீட்டு வேலைக்கு ஆன்லைன் மூலம் ஆட்களை தேடினார். அதன்படி, வீட்டு வேலைகளுக்கு ஆட்களை பணியமர்த்தும் தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளார். அந்த நிறுவனத்தைச் சேர்ந்த அமுல் (41) என்ற பெண், அசோக்ராஜின் வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி பணம் பெற்றுள்ளார்.
ஆனால் பேசியபடி வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பவில்லை. பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து அசோக்ராஜ், நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிந்து சைதாப்பேட்டையைச் சேர்ந்த அமுலை கைது செய்தனர்.
இவர் இதே போன்று ஆன்லைன் மூலம் வீட்டு வேலைக்கு ஆட்களை தேடும் நபர்களைத் தொடர்பு கொண்டு பணத்தை வாங்கிக்கொண்டு மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.