

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆக.4 அன்று வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு ஆந்திர மற்றும் தெற்கு கர்நாடகா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி (shear zone at a height of 5.8 and 7.6 km above mean sea level) காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
தென்மேற்கு பருவக்காற்றின் மழைப்பொழிவு (orographic rainfall) காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 4 அன்று மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வரும் ஆகஸ்டு 4-ம் தேதி உருவாக வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த மாவட்டங்கள் விவரம்:
தேவலா (நீலகிரி) 15 செ.மீ., அவலாஞ்சி (நீலகிரி) 10 செ.மீ., கூடலூர் (நீலகிரி) 9 செ.மீ., பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), பந்தலூர் (நீலகிரி) தலா 8 செ.மீ., சின்னக் கல்லாறு (கோவை) மேல் பவானி (நீலகிரி) தலா 7 செ.மீ., சோலையாறு (கோவை) 6 செ.மீ., சின்கோனா (கோவை) 5 செ.மீ., தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்) வால்பாறை (கோவை) நடுவட்டம் (நீலகிரி) தலா 4 செ.மீ.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று மத்திய கிழக்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல், வடக்கு அந்தமான் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 3 மற்றும் 4-ம் தேதிகளில் ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 4 முதல் 6-ம் தேதி வரை மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த மற்றும் சூறாவளிக் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 3 முதல் 7-ம் தேதி வரை கடலோரக் கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு, தென்மேற்கு, மத்திய கிழக்கு, மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 6-ம் தேதி அன்று அன்று ஒடிசா, மேற்கு வங்கம் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 3-ம் தேதி அன்று மகாராஷ்டிரா, கோவா கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 4 முதல் 6-ம் தேதி வரை மகாராஷ்டிரா, கோவா கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 5-ம் தேதி அன்று தெற்கு குஜராத் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 6 மற்றும் 7-ம் தேதிகளில் குஜராத் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடல் அலை முன் அறிவிப்பு:
தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை ஆகஸ்ட் 4 அன்று இரவு 11.30 மணிவரை கடல் அலை 2.5 முதல் 3.9 மீட்டர் வரை எழும்பக்கூடும்”.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது