

குற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க பொது மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என காவல் உதவி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. ஊரடங்கால் பலர் வேலை மற்றும் வருமானத்தை இழந்துள்ளனர். இதனால், பழைய குற்றவாளிகள் மீண்டும் கைவரிசை காட்டவும், புதிய குற்றவாளிகள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது. எனவே, பொது மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என சென்னை எம்.கே.பி.நகர் சரக காவல் உதவி ஆணையர் ஹரிகுமார் அறிவுரை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக மக்களிடையே அவர் விநியோகித்துள்ள துண்டுப் பிரசுரத்தில் கூறியிருப்பதாவது:
கரோனா காலத்தில் குற்றச் செயல்கள் நடைபெறாமல் இருக்க பொது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவைக்கு அதிகமான விலை உயர்ந்த நகைகளை பொது வெளியில் அணிவதை தவிர்க்கலாம். விலை உயர்ந்த செல்போன்களை அதிகம் பயன்படுத்த வேண்டாம். அதிக பணத்தை கையில் எடுத்துச் செல்ல வேண்டாம். எப்போதும் கையில் அவசர எண்ணை வைத்திருக்க வேண்டும்.
சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டம் குறித்துகாவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.