மூலிகை டீ அருந்தியபடியே இலவசமாக புத்தகம் படிக்கலாம்: சிவகங்கை பழைய புத்தகக்கடையில் ஏற்பாடு

மூலிகை டீ அருந்தியபடியே இலவசமாக புத்தகம் படிக்கலாம்: சிவகங்கை பழைய புத்தகக்கடையில் ஏற்பாடு
Updated on
1 min read

சிவகங்கையில் இயங்கும் பழைய புத்தகக்கடையில் மூலிகை டீ அருந்தியபடியே இலவசமாக புத்தகம் படிக்க கடை உரிமையாளர் ஏற்பாடு செய்துள்ளார்.

சிவகங்கை அருகே இலந்தங்குடியைச் சேர்ந்தவர் முருகன். இவர் சிவகங்கை காளைவாசல் பகுதியில் 'தமிழ்குடியோன்' என்ற பெயரில் பழைய புத்தகக் கடை வைத்துள்ளார். வாசிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்தும் நோக்கத்தில் சலுகை விலையில் புத்தகங்களை வழங்கி வருகிறார்.

கரோனா முழு ஊரடங்கு சமயத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற இவர் இலவசமாக புத்தகங்களை வழங்கியிருக்கிறார். தற்போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மூலிகை தேனீரை தனது பழைய புத்தகக் கடையில் வழங்குகிறார்.

மேலும் மூலிகை டீயின் விலை ரூ.10 என்றாலும், அதை அருந்த வரும் வாடிக்கையாளார்களுக்கு இலவசமாக புத்தகங்களைப் படிக்கக் கொடுக்கிறார். இது வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து முருகன் கூறியதாவது: தொல்லியல், புத்தக வாசிப்பு, பல்லுயிர் பெருக்கம் உள்ளிட்ட விஷயங்களில் எனக்கு சிறுவயதில் இருந்தே அதிக ஈடுபாடு உள்ளது.

நம்மைச் சுற்றிக் கிடைக்கும் மூலிகைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவே இந்த மூலிகை டீ கடையை ஆரம்பித்துள்ளேன்.
அத்துடன் புத்தகம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தவும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக புத்தகம் வழங்குகிறேன்.

டீ குடிக்காவிட்டாலும் இலவசமாக புத்தகம் படிக்க வரலாம். ஆவாரை, நத்தைச் சூரி, கற்பூரவல்லி, ஆடாதோடை, தூதுவளை என 5 வகையான மூலிகை டீ வழங்குகிறோம். அத்துடன் முளைகட்டிய சிறுதானியமும் வழங்குகிறேன், என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in