

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் காவலர்கள் முத்துராஜா, தாமஸ் பிரான்ஸிஸ் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் ரகுகனேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 போலீஸார் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட போலீஸாரில் தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜா ஆகியோர் ஜாமீன் கேட்டு மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி தாண்டவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சிறையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் வழக்கறிஞர்கள், சாத்தான்குளம் இரட்டை கொலைக்கும் மனுதாரர்களுக்கும் தொடர்பில்லை. இதனால் ஜாமீன் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
சிபிஐ வழக்கறிஞர் விஜயன் செல்வராஜ் வாதிடுகையில், இரட்டை கொலையில் மனுதாரர்களுக்கு தொடர்பு இருப்பதாக அவர்களே வாக்குமூலம் அளித்துள்ளனர். எனவே இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது. ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என்றார்.
இதையேற்று இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதே வழக்கில் கைதான காவலர் முருகனின் ஜாமீன் மனு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது.