

திருமழிசை சந்தையில் மழைநீர் வெளியேற ஏதுவாக கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த 2 மாதங்களாக புறநகர் பகுதிகளில் அவ்வப்போது மழைபெய்து வருகிறது. இதன் காரணமாக திருமழிசையில் இயங்கி வரும் தற்காலிக சந்தையில் மழைநீர் தேங்கி சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் காய்கறி விற்பனை பாதிக்கப்பட்டு வருகிறது.
இதனால் அப்பகுதியில் ஆங்காங்கே பள்ளங்களில் தேங்கியுள்ள மழைநீர் நகராட்சி நிர்வாகம் மூலமாக அகற்றப்பட்டு வருகிறது.
தொடர் மழை காரணமாக சேதமடைந்த மண் பாதைகள் மற்றும் சாலைகளை கல் மற்றும் மண் கொண்டு சமன்படுத்தி உறுதியான மற்றும் நிலையான சாலைகளை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளன.
மேலும், மழைநீர் வெளியேற ஏதுவாக சாலைகளின் குறுக்கே மழைநீர் கால்வாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்பணிகளை திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் நேற்று ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.