

கிராமங்களில் நடக்கும் அனைத்து அடிப்படைப் பணிகளும் தங்கள் மூலம்தான் நடைபெற வேண்டும் என ஊராட்சித் தலைவர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மதுரை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளிக்க வந்த ஊராட்சித் தலைவர்கள். திருப்பரங்குன்றம் ஒன்றிய ஊராட்சித் தலைவர்கள் கூட்ட மைப்புச் சங்கத் தலைவர் சாகுல் ஹமீது, செயலாளர் தங்கம் தலைமையிலானோர் நேற்று மதுரை ஆட்சியர் டி.ஜி.வினயிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 36 கிராம ஊராட்சிகளில் மத்திய அரசின் குடிநீர் திட்டம், மானியக் குழு நிதி வேலைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புப் பணிகள் மொத்தமாக ஒப்பந்த முறையில் மாவட்ட ஊரக முகமை வாயிலாக வழங்கப்படுகின்றன. இதனால், ஊராட்சித் தலைவர்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி ஊராட்சி வாயிலாகப் பணிகளை மேற்கொள்ள ஊராட்சித் தலைவர்களுக்கு உரிய அதிகாரம் வழங்க வேண்டும்.
மேலும் இது போன்ற பல பணிகளை இணைத்து ஒரே ஒப்பந்தமாக வழங்கும் முறையையும் மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.