சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 3 போலீஸாரை காவலில் எடுக்க சிபிஐ மனு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 3 போலீஸாரை காவலில் எடுக்க சிபிஐ மனு
Updated on
1 min read

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் உட்பட 5 பேர் ஏற்கெனவே 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 போலீஸாரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மதுரை நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கின் போது கூடுதல் நேரம் செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முதல் நிலை காவலர் முத்துராஜா, சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை, தலைமை காவலர் சாமிதுரை, முதல் நிலை காவலர்கள் வெயில்முத்து, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரை 2 பேரை சிபிஐ போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இந்நிலையில் இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தலைமை காவலர் சாமிதுரை, முதல் நிலை காவலர்கள் தாமஸ் பிரான்சிஸ், செல்லதுரை ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.

இதையடுத்து 3 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மதுரை தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in