

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 109 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2,000-ஐ எட்டியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 109 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,999 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 817 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். 1,154 பேர் குணடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (ஜூலை 19) கூறும்போது, "புதுச்சேரியில் 768 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது புதுச்சேரியில் 104 பேர், காரைக்காலில் 3 பேர், ஏனாமில் 2 பேர் என மொத்தம் 109 பேருக்கு (14.2 சதவீதம்) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் 77 பேர் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், 27 பேர் ஜிப்மரிலும், 3 பேர் காரைக்காலிலும், 2 பேர் ஏனாமிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1,999 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தற்போது 817 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று அதிகபட்சமாக கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 37 பேர், ஜிப்மரில் 11 பேர், 'கோவிட் கேர் சென்ட'ரில் 17 பேர், காரைக்காலில் 27 பேர் என மொத்தம் 92 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,154 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 28 ஆக உள்ளது. இதுவரை 30 ஆயிரத்து 652 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 28 ஆயிரத்து 214 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது. 361 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளன" என தெரிவித்தார்.