

பெருநகர சென்னை மாநகராட்சியில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள முதல்நிலை ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கரோனா நோய் எதிர்ப்பு சக்தியைக் கண்டறியும் பரிசோதனையை ஆணையர் பிரகாஷ் இன்று தொடங்கி வைத்தார். ஆர்சனிக் ஆல்பம் மாத்திரைகளையும் வழங்கினார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''சென்னை மாநகராட்சியின் சார்பில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நிலையில் உள்ள அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என மொத்தம் சுமார் 44,000 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர்.
இப்பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் பாதுகாப்பு நடவடிக்கையாக ஏற்கெனவே முகக்கவசம், கிருமிநாசினி மற்றும் முழு கவச உடை போன்ற பாதுகாப்பு உபகரணங்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஜிங்க், விட்டமின் மாத்திரைகள் மற்றும் கபசுரக் குடிநீர் ஆகியவை நாள்தோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், இப்பணிகளில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்குக் கரோனா நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை இடத்திலுள்ள சுமார் 500 நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியும் பரிசோதனையை (Anti body test) இன்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், அம்மா மாளிகை கூட்டரங்கில் தொடங்கி வைத்தார்.
இந்தப் பரிசோதனையானது ஒருவருக்கு எந்த அளவில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது என்பதை அறிந்துகொள்ள உதவும் முக்கியமான பரிசோதனையாகும். இந்தப் பரிசோதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தால் (ICMR) அங்கீகரிக்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவியின் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்தப் பரிசோதனையின் மூலம் ஒருவருக்குத் தொற்று உண்டாகி இருக்கிறதா இல்லையா எனவும், ஒருவருக்குத் தற்போது தொற்று இருக்கிறதா எனவும், ஒருவர் தொற்று ஏற்பட்டு குணமடைந்து இருக்கிறாரா எனவும் எளிதில் கண்டறிய இயலும். ஒருவரின் உடலில் உருவாகி உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவைக் கண்டறிந்து இந்தப் பரிசோதனையின் மூலம் பிளாஸ்மா நன்கொடையாளர்களையும் கண்டறிய இயலும்.
தொடர்ந்து ஆணையர், மாநகராட்சி முதல்நிலைப் பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற நோய் எதிர்ப்புசக்தி மாத்திரைகளை வழங்கினார்''.
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.