

கரோனா வைரஸ் பரவல் தொடர்பான நேர்மறையான விழிப்புணர்வு வாசகங்களைப் பொது இடங்களில் ஒலிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. தற்போது 6-ம் கட்டமாக வருகிற 31-ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், விழுப்புரம் நகரில் ஊரடங்கு தொடங்கிய காலம் முதல் தற்போது வரை 'கரோனா வைரஸ் பேரழிவை உண்டாக்கும் உயிர்க்கொல்லி நோயாகும்' என தொடங்கும் விழிப்புணர்வு வாசகங்கள் பதிவு செய்யப்பட்டு மக்கள் கூடும் இடங்களான புதிய, பழைய பேருந்து நிலையம், சிக்னல், கடைவீதி போன்ற இடங்களில் காவல்துறையினரால் தொடர்ந்து ஒலிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நேற்று (ஜூலை 13) வரை 1 லட்சத்து 42 ஆயிரத்து 798 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, 92 ஆயிரத்து 567 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழக அளவில் இது சுமார் 70 சதவீதமாகும்.
இவ்வளவு பேர் குணமடைந்துவரும் நிலையில் இன்னமும் பொதுமக்களைப் பீதிக்குள்ளாக்கும் வகையில் இப்படி தொடர்ந்து ஒலிபரப்பு செய்ய வேண்டுமா? நேர்மறையாக மாற்றி ஒலிபரப்பு செய்யலாமே என விழுப்புரம் எஸ்.பி. ராதாகிருஷ்ணனை கேட்டபோது, "உண்மைதான், இது குறித்து ஆட்சியரிடம் கலந்தாலோசித்து விழிப்புணர்வு வாசகத்தை மாற்றி ஒலிபரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.