பவானிசாகர் அணை நீர்மட்டம் அதிகரிப்பு

பவானிசாகர் அணை நீர்மட்டம் அதிகரிப்பு
Updated on
1 min read

ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், பல லட்சம் விவசாய விளை நிலங்களின் வாழ்வாதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்கி வருகிறது. அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

கடந்த 6-ம் தேதி 81 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 82.40 அடியாக உயர்ந்து உள்ளது. அணைக்கு விநாடிக்கு 768 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்துக்கு காலிங்கராயன் வாய்க்காலில் 250 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் குண்டேரிப்பள்ளம், வரட்டுப்பள்ளம் தடுப்பணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in