

புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மாவட்ட எஸ்.பி., சிறப்பு அதிகாரி ஆகியோரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்த நிலையில், திருநெல்வேலியைப் பிரித்து தென்காசி, விழுப்புரத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சி, வேலூரைப் பிரித்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரத்தைப் பிரித்து செங்கல்பட்டு என புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்தது.
இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த மார்ச் 24-ம் தேதி சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்குவதற்கான அரசாணை கடந்த ஏப்.8-ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மாவட்ட எஸ்.பி., சிறப்பு அதிகாரி ஆகியோரை நியமித்து தமிழக அரசு இன்று (ஜூலை 12) உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்திற்குச் சிறப்பு அதிகாரியாக ஆர்.லலிதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்ட எல்லைகளை உருவாக்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.யாக இருந்த ஸ்ரீநாதா மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, கன்னியாகுமரி எஸ்.பி.யாக இருந்த ஸ்ரீநாதா, சிபிசிஐடி எஸ்.பி.யாக மாற்றப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.