மதுரை காவல்துறையினருக்கு தினமும் காய்ச்சல், ஆக்சிஜன் அளவு பரிசோதனை: கரோனாவில் இருந்து பாதுகாக்க  ஏற்பாடு

மதுரை காவல்துறையினருக்கு தினமும் காய்ச்சல், ஆக்சிஜன் அளவு பரிசோதனை: கரோனாவில் இருந்து பாதுகாக்க  ஏற்பாடு
Updated on
1 min read

மதுரையில் காவல்துறையினரை கரோனாவில் இருந்து பாதுகாக்க காய்ச்சல், ஆக்சிஜன் அளவு தினமும் கண்டறியவேண்டும் என, அனைத்து காவல் ஆய்வாளர்களுக்கும் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.

மதுரையில் கரோனா தொற்று அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு பிற பாதிப்புள்ள 57 வயதுக்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் பாதுகாக்கும் நோக்கில் குறிப்பிட்ட நாட்களுக்கு ஓய்வளிக்கும் திட்டத்தை புதிய காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா கொண்டு வந்துள்ளார்.

இதற்கான பட்டியலில் 100 பேர் இடம் பெற்றுள்ளனர். மருத்துவரின் ஆலோசனைப்படி, இவர்களுக்கு ஓய்வளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பெரும்பாலும் எவ்வித வெளிப்புற அறிகுறியும் இன்றி சிலரை கரோனா துரிதமாக பாதிக்கிறது என்ற நிலை உள்ளது.

மதுரை நகரில் பணிபுரியும் காவல்துறையினருக்கு காய்ச்சல், ஆக்சிஜன் அளவை கண்டறிய காவல் ஆய்வாளர் களுக்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் தெர்மல் ஸ்கேனர், ஆக்சிஜன் அளவு அறியும் பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவிகள் ஏற்கனவே வழங்கப் பட்டுள்ளன.

காவல் நிலையங்களில் பணியிலுள்ள காவலர்கள், அந்தந்த காவல் நிலைய எல்லையில் (டியூடி பாய்ண்ட்) பணிபுரியும் காவலர்களுக்கு தினமும் காய்ச்சல், ஆக்சிஜன் அளவு கண்டறிந்து, தேதி, நேரத்துடன் குறிப் பெடுக்கவேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையொட்டி ஆய்வாளர்கள் இன்று முதல் காவலர்களுக்கு ஆய்வு செய்கின்றனர். அறிகுறி தென்பட்டால் அவர்களை உடனே சிகிச்சை ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்றில் இருந்து மதுரை காவல்துறையினரை பாதுகாக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என, நகர் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திடீர்நகர் காவல் ஆய்வாளர் லட்சுமி கூறுகையில்,‘‘ எல்லா காவல் நிலைய ஆய்வாளர்களும் அவரவர் காவல் நிலைய போலீஸாருக்கு காய்ச்சல் ஆய்வு செய்கிறோம்.

பணியில் இருக்கும்போது, பொதுமக்கள் மாஸ்க் அணியாமல் சென்றால் அவர்களுக்கு மாஸ்க் வழங்குவதோடு, காய்ச்சல், ஆக்சிஜன் அளவு கண்டறிகிறோம். மார்க்கெட் போன்ற மக்கள் கூடும் இடங்களில் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுகிறோம்,’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in