மன்னர் மன்னன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய புதுவை முதல்வர் நாராயணசாமி.
மன்னர் மன்னன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய புதுவை முதல்வர் நாராயணசாமி.

பாவேந்தர் பாரதிதாசன் சமாதி அருகே அவரது மகன் மன்னர் மன்னனின் உடலும் நல்லடக்கம்

Published on

பாவேந்தர் பாரதிதாசன் சமாதி அருகிலேயே அவரது மகன் மன்னர் மன்னனின் உடலும் அரசு ஒப்புதலுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

புரட்சிக்கவிஞர், பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகனும் முதுபெரும் தமிழறிஞரும் விடுதலைப் போராட்ட வீரருமான, தமிழ்மாமணி மன்னர் மன்னன் என்கிற கோபதி நேற்று (ஜூலை 6) பிற்பகல் புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 92 . கடந்த மூன்றரை ஆண்டுகளாக உடல்நலம் குன்றிய நிலையில் இருந்தார்.

புதுச்சேரி மற்றும் சென்னை வானொலி நிலையங்களில் கடந்த 1967 முதல் 1988 வரை ஆசிரியராகப் பணியாற்றிய மன்னர் மன்னன், ஏறத்தாழ 50 நூல்கள் எழுதியுள்ளார். புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் தலைவராகப் பல ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார்.

பாவேந்தர் பாரதிதாசன் பற்றி இவர் எழுதிய 'கருப்புக் குயிலின் நெருப்புக் குரல்' என்ற நூலுக்கு தமிழ்நாடு அரசின் விருது வழங்கப்பட்டது.

தமிழக அரசின் திரு.வி.க. விருது, கலைமாமணி விருது, புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி, கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை மன்னர் மன்னன் பெற்றுள்ளார். இவரது மறைவையொட்டி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

இன்று (ஜூலை 7) காலை 10 மணி வரை காந்திநகர் முதல் தெருவிலுள்ள இல்லத்தில் மன்னர் மன்னன் உடல் வைக்கப்பட்டிருந்தது. பிறகு, அங்கிருந்து எடுத்து வரப்பட்டு பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் (பாரதிதாசன் வாழ்ந்த இல்லம்) பொதுமக்கள் அஞ்சலிக்காக மன்னர் மன்னன் உடல் வைக்கப்பட்டது.

முதல்வர் நாராயணசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் புதுச்சேரி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து இன்று மாலை அங்கிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு புதுச்சேரி வைத்திக்குப்பம் பாப்பம்மாள் கோயில் இடுகாட்டில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் நினைவிடத்தில் அவரது சமாதி அருகே மன்னர் மன்னன் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பாவேந்தர் சமாதி அருகே அவரது மகன் மன்னர் மன்னனுக்கும் நினைவிடம் அமைக்க அவரது குடும்பத்தினர் கோரியதற்கு புதுச்சேரி அரசு ஒப்புதல் தந்து அடக்கம் செய்யப்பட்டது. உடல் அடக்க நிகழ்வில் முதல்வர் நாராயணசாமி மற்றும் பலர் பங்கேற்றனர். போலீஸ் பேண்ட் வாத்தியமும் இசைக்கப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in