தந்தை, மகன் மரணம் வழக்கு: சாத்தான்குளத்தில் சிபிசிஐடி ஐ.ஜி, எஸ்.பி மீண்டும் ஆய்வு

தந்தை, மகன் மரணம் வழக்கு: சாத்தான்குளத்தில் சிபிசிஐடி ஐ.ஜி, எஸ்.பி மீண்டும் ஆய்வு
Updated on
1 min read

போலீஸார் தாக்கியதில் தந்தை, மகன் மரணமடைந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி ஐஜி, எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் மீண்டும் சாத்தான்குளத்தில் நேரில் ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக்காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி ஐஜி சங்கர், எஸ்.பி. விஜயகுமார் ஆகியோர் கடந்த 1-ம் தேதி முதல் தூத்துக்குடியிலேயே முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த 1-ம் தேதி சாத்தான்குளத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து தூத்துக்குடி அலுவலகத்தில் வைத்து சாட்சிகளிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் ஐஜி சங்கர், எஸ்பி விஜயகுமார் உள்ளிட்ட சிபிசிஐடி அதிகாரிகள் நேற்று இரவு திடீரென சாத்தான்குளம் சென்றனர். அவர்கள் சாத்தான்குளம் காவல் நிலையம், அரசு மருத்துவமனை, ஜெயராஜ் கடை உள்ளிட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்து, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கை சிபிஐ முறைப்படி ஏற்றுக் கொண்டு, அதற்கான அறிவிக்கையை வெளியிட்ட நிலையில், இன்று தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் சாட்சிகள் விசாரணை ஏதும் நடைபெறவில்லை.

சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல் அளித்து அறிவிக்கை வெளியிட்ட போதிலும், விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு விசாரணையைத் தொடங்கும் வரை எங்கள் விசாரணை தொடரும். சிபிஐயிடம் இருந்து முறையான வேண்டுகோள் வந்த பிறகே வழக்கு ஆவணங்களை அவர்களிடம் ஒப்படைப்போம். அதுவரை எங்களது விசாரணை தொடர்ந்து நடைபெறும் என சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in