ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலக அலுவலர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர்; திருச்சி ஆட்சியரிடம் திமுக ஒன்றியக் குழுத் தலைவர்கள் புகார்

புகார் மனு அளித்த திமுகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் ஒன்றியக் குழுத் தலைவர்கள்.
புகார் மனு அளித்த திமுகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் ஒன்றியக் குழுத் தலைவர்கள்.
Updated on
1 min read

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலக அலுவலர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர் என்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் திமுக ஒன்றியக் குழுத் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக மாவட்ட ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் திமுகவைச் சேர்ந்த ஒன்றியக் குழு தலைவர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இன்று (ஜூலை 7) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசுவிடம் புகார் மனு அளித்தனர்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர்கள் கூறும்போது, "திருச்சி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியக் குழுக்களின் தலைவர்களாக திமுகவினர் உள்ளனர். இதனால், அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் ஒப்பந்தப்புள்ளிகளை விடுவதற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர்கள் அனுமதிக்காமல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அலுவலகத்திலேயே வைத்து முடிவு செய்கின்றனர். ஒப்பந்தப்புள்ளிகள் குறித்து மாவட்ட ஊராட்சித் தலைவருக்கோ, ஒன்றியக் குழு தலைவர்களுக்கோ தகவல் தெரிவிப்பதில்லை.

ஆளுங்கட்சியினருக்கு ஆதரவான முடிவை எடுக்கும் நோக்கிலேயே இதுபோன்று அரசு அலுவலர்கள் செயல்படுகின்றனர். எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்தார்" என்றனர்.

இது தொடர்பாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அலுவலர்களிடம் கேட்டபோது, "ஒப்பந்தப்புள்ளிகள் விடுவது குறித்து நாளிதழ்களில் விளம்பரம் செய்து, அந்தந்த ஒன்றிய அலுவலகங்களுக்கும் முறையாகத் தகவல் அனுப்பப்படுகிறது. குறிப்பாக, அரசின் விதிகளைப் பின்பற்றித்தான் ஒப்பந்தப்புள்ளிகள் அளிக்கப்படுகின்றன" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in