சாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்துக்கு சரத்குமார் நேரில் ஆறுதல்: ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்கினார்

சாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்துக்கு சரத்குமார் நேரில் ஆறுதல்: ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்கினார்
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தினரை, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று அவர்களது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிஸ் மரணமடைந்த சம்பவம் மிகவும் வேதனையான நிகழ்வாகும். இந்த சம்பவம் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.

சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிமன்றமும் விசாரணை நடத்தி வருகிறது.

நீதிமன்றம் மற்றும் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த சம்பவத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்த வழக்கில் நீதிமன்றம் நல்ல தீர்ப்பை தரும் என நம்புகிறேன்.

இதுபோன்ற சம்பவம் இனி வரும் காலங்களில் எந்த சூழ்நிலையிலும், யாருக்கும் நடைபெறாமல் பார்த்துக் கொள்வது சமூகத்தின் கடமை.

இந்த சமூகத்துக்கு உட்பட்டது தான் காவல் துறை. தமிழக காவல் துறை சிறப்பாக செயல்பட்டாலும், இதுபோன்ற சிறு சம்பவங்கள் கூட இழுக்கை ஏற்படுத்தி விடும் என்றார் அவர். அப்போது கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் என்.சுந்தர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in