

கோவையில் பெண் யானையைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட, சுண்டப்பட்டி ஐடிசி பம்ப் ஹவுஸ் அருகே பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான நிலம் உள்ளது. அங்கு பெண் யானை ஒன்று இன்று (ஜூலை 2) காலை இறந்து கிடந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், யானை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, "யானை இறந்து கிடந்த இடத்தை கிருஷ்ணசாமி, ராமசாமி ஆகிய இருவர் ஆக்கிரமித்துப் பயிர் செய்து வந்துள்ளனனர். அந்தப் பகுதிக்கு நேற்று (ஜூலை 1) ஒரு யானைக்கூட்டம் வந்துள்ளது. அவற்றை விரட்ட துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் பெண் யானையின் இடது காது அருகே துளைத்துக்கொண்டு மூளை வரை இரும்பு குண்டு சென்றதால் அந்த யானை உயிரிழந்துள்ளது. பிரேதப் பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணசாமி, ராமசாமி ஆகிய இருவரும் சேர்ந்து ஒளித்து வைத்திருந்த ஒரு நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த பெண் யானைக்கு பிறந்து சில மாதங்களே ஆன குட்டி இருக்கலாம் எனக் கருதுகிறோம். வனப்பணியாளர்களும் இந்த யானைக்குக் குட்டி இருப்பதாகவும், தற்போது அந்தக் குட்டி சில பெண் யானைகள் உள்ள கூட்டத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தனர். அந்தக் குட்டி யானை கண்காணிக்கப்படும்" என்றனர்.
அடுத்தடுத்து உயிரிழப்பு
இதுதவிர, சிறுமுகை வனச்சரகத்துக்குட்பட்ட லிங்காபுரம் பகுதியில் பெண் யானை ஒன்று நேற்று உயிரிழந்தது. கோவை மாவட்ட வனப்பகுதியில் ஊரடங்குக் காலத்தில் மட்டும் 12 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. இதில், சிறுமுகை வனச்சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 7 யானைகள் உயிரிழந்துள்ளன. ஒரு ஆண் யானை உயிருக்குப் போராடி வருகிறது.
சிறுமுகை, பெத்திக்குட்டை வனப்பகுதி முட்காடுகளைக் கொண்டது. எனவே, அங்கு போதிய உணவு கிடைக்காமல் யானைகள் இருப்பதாக வனப்பணியாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு அடுத்தடுத்து யானைகள் உயிரிழப்பது வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.