சாத்தான்குளம் சம்பவம்: கொலை வழக்குப் பதிவு செய்த சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு; சாட்சியம் சொன்ன பெண் காவலருக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு

சாத்தான்குளம் சம்பவம்: கொலை வழக்குப் பதிவு செய்த சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு; சாட்சியம் சொன்ன பெண் காவலருக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு
Updated on
1 min read

சாத்தான்குளம் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், ஊதியத்துடன் விடுப்பு வழங்கவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரித்துப் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.

இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் வரை தற்காலிகமாக சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டது. மேலும், இந்த சம்பவத்தில் போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாகவும் தெரிவித்தது.

அதன்பேரில் சிபிசிஐடி போலீஸார் நேற்று முன்தினம் தங்கள் விசாரணையை தொடங்கினர். சிபிசிஐடி ஐஜி சங்கர், எஸ்பி விஜயகுமார், டிஎஸ்பிக்கள் அணில்குமார், முரளிதரன் ஆகியோர் சாத்தான்குளத்தில் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

கொலை வழக்குப் பதிவு செய்து ஆய்வாளர் ரகு கணேஷ், உதவி ஆய்வாளரான பாலகிருஷ்ணன், தலைமைக்காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோரைக் கைது செய்தனர். இன்னும் 2 பேரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் புகழேந்தி, பிரகாஷ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், "சாத்தான்குளம் வியாபாரிகள் சம்பவத்தில் கொலை வழக்குப் பதிவு செய்து குற்றஞ்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்த சிபிசிஐடிக்கு பாராட்டுகள்.

வழக்கின் முக்கிய சாட்சியான தலைமை காவலர் ரேவதிக்கு முழு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என உத்தரவிட்டது.

மேலும், எத்தனை பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிபதி முன் ஆஜர்படுத்துக:

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிபதி முன் ஆஜர்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு. வழக்கு விசாரணை முழுவதையும் தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிபதி நடத்த உயர் நீதிமன்றத்தால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி நீதிமன்றம் தூரமாக இருப்பதாலும் தூத்துக்குடி மாவட்டத் தலைநகரமாக இருப்பதால் மிகவும் அருகில் மாவட்ட நீதிமன்றம் உள்ள காரணத்தால் தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிபதிக்கு சிறப்பு அதிகாரம் வழங்கி வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in