என்எல்சி விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு; 17 பேர் படுகாயம்; உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டம்

விபத்தால் ஏற்பட்டுள்ள கரும்புகை
விபத்தால் ஏற்பட்டுள்ள கரும்புகை
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2-வது அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இன்று (ஜூலை 1) காலை இரண்டாவது அனல்மின் நிலையத்தின் 5-வது அலகு பகுதியில், திடீரென கொதிகலன் வெடித்துச் சிதறியது. இதில் அங்குப் பணியாற்றிக் கொண்டிருந்த மேலக்குப்பத்தை சேர்ந்த பத்மநாபன் (28), கொள்ளிருப்பை சேர்ந்த அருண்குமார் (27), கள்ளமேட்டை சேர்ந்த வெங்கடேசபொருமாள் (28), நெய்வேலி டவுன்ஷிப்பை சேர்ந்த நாகராஜன்(52), காப்பாங்குளத்தைச் சேர்ந்த சிலம்பரசன் (25), பண்ருட்டி ஆத்திரிக்குப்பம் ராமநாதன்(46) ஆகிய 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர்.

படுகாயம் காயமடைந்தவர்களுக்கு என்எல்சி பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிசிக்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 6 பேரின் உடலும் விழப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் 2-வது அனல்மின் வாயிலில் நிவாரணம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் 2-வது அனல்மின் நிலையம் முகப்பு பகுதியில் கதறி அழுதனர். இதனால், நெய்வேலியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் 7-ம் தேதி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர், 8 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in