

சாத்தான் குளம் தந்தை மகன் மரண விவகாரத்தில் சாத்தான் குளம் ஆய்வாளர் ஸ்ரீதர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே 2 எஸ்.ஐ, 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் ஆய்வாளர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததால் வந்த விவகாரத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்னர். பின்னர் கடுமையாகத் தாக்கப்பட்டு கோவில்பட்டி கிளைச்சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த இருவர் மரணத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன. தூத்துக்குடி மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அனைவரும் கோரிக்கை வைத்தனர். உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையில் எடுத்து விசாரித்து வருகிறது.
மாநில மனித உரிமை ஆணையமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் எதிர்ப்பைக் காட்ட வணிகர்கள் கடையடைப்பை நடத்தி வருகின்றனர். திமுக எம்.பி. கனிமொழி தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு இதுகுறித்துக் கடிதம் எழுதியுள்ளார்.
“கரோனாவை விடக் கொடூரமான முறையில் தமிழகக் காவல்துறை நடந்து கொண்ட காரணத்தால், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்களான ஜெயராஜும், அவரது மகன் பென்னிக்ஸும் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
ஊரடங்கு நேரத்தில், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய காவல்துறையினர், சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அனுமதித்ததன் விளைவுதான் இந்தப் பெருங்கொடூரம்” என திமுக தலைவர் ஸ்டாலின் இருவரது மரணம் குறித்தும் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
பலத்த எதிர்ப்பை அடுத்து மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ஹரி உட்பட 4 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். புதிய ஆய்வாளர் ஸ்டேஷனுக்கு நியமிக்கப்பட்டார்.
மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் இன்று சாத்தான்குளம் ஸ்டேஷனுக்கு சென்று விசாரணை நடத்தினார். இந்நிலையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஆய்வாளர் ஸ்ரீதரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.