அரசு பேருந்து நடத்துநர்களுக்கு விசிலுக்கு பதில் ‘காலிங் பெல்’ - கரோனா பாதுகாப்பு கருதி நடவடிக்கை

‘காலிங் பெல்’
‘காலிங் பெல்’
Updated on
1 min read

கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு பேருந்து நடத்துநர்களுக்கு விசிலுக்குப் பதில் பேட்டரி மூலம் இயங்கும் ‘காலிங் பெல்’ வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சென்னை,காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களைத் தவிர இதர மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை 60 சதவீத பயணிகளுடன் இயக்க தமிழக அரசு அனுமதிஅளித்துள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 5 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

போக்குவரத்து பணிமனைகள், பேருந்துகளில் கரோனாபாதுகாப்பு முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, பேருந்துகளின் இயக்கத்தை கண்காணித்து ஓட்டுநர்களுக்கு தெரிவிக்கும் வகையில் விசிலுக்குப் பதில்‘காலிங் பெல்’ வழங்கப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்

இதுதொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழக அரசின்வழிமுறைகளைப் பின்பற்றி, கரோனா முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து, தொடர்ந்து பேருந்துகளை இயக்கிவருகிறோம். ஒவ்வொரு பேருந்திலும் இருக்கையில் குறியீடு,கிருமிநாசினி தெளிப்பது, கையுறை வழங்குவதை தொடர்ந்து செய்து வருகிறோம்.

கரோனா அச்சத்தால் மக்கள் வெளியூர் பயணம் செய்வதைத் தவிர்த்து வருகின்றனர். ஒவ்வொரு பேருந்துகளிலும் சராசரியாக 20 பேர் மட்டுமே பயணம் செய்து வருகின்றனர்.

படிப்படியாக விரிவுபடுத்தப்படும்

ஒவ்வொரு பேருந்தும் சென்றுவரும்போதெல்லாம் கிருமிநாசினி தெளித்து பேருந்துகளை பாதுகாப்பாக இயக்கிவருகிறோம். பேருந்துகள் இயக்கத்தின்போது நடத்துநர்கள் விசில் பயன்படுத்துவதால் வாயில் இருந்து நீர்த் துளிகள் வெளியே சிதறுவதற்கு வாய்ப்புஉள்ளது.

எனவே, விசிலுக்குப் பதில்பேட்டரி மூலம் இயங்கும் ‘காலிங் பெல்’ வழங்கும் முறை விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்தது, மற்ற போக்குவரத்து கழகங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்த போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in