

தமிழகத்தில் சென்னையைத் தாண்டி மாவட்ட அளவிலும் கரோனா தொற்று பரவுவதால் அடுத்து என்ன நடவடிக்கை, ஊரடங்கை நீட்டிப்பதா என்பது குறித்து முதல்வர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் ஆரம்பித்தவுடன் மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக ஊரடங்கு தொடர்ந்து 5 கட்டங்களாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய ஊரடங்கு வரும் ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் சென்னை, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்து வருபவர்கள் மூலம் தமிழகம் முழுவதும் சில மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை பரவலாக அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் டாஸ்க் ஃபோர்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பு வகிக்கின்றனர். சென்னையைத் தவிர மாவட்டந்தோறும் கரோனா தொற்று நடவடிக்கைகள் அனைத்துக்கும் மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு வகிக்கின்றனர். மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இவர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவார்கள்.
இதனால் முதல்வர் பழனிசாமி ஒவ்வொரு ஊரடங்கு முடியும் தருவாயில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அகில இந்திய அளவில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 10 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2-வது இடத்தில் உள்ள டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66,602 பேராக அதிகரித்துள்ளது. 3-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 64 ஆயிரத்து 463 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சென்னையைத் தவிர 34 மாவட்டங்களில் 1,223 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 35 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 4,030, திருவள்ளூர் 2,826, காஞ்சிபுரம் 1,286, திருவண்ணாமலை 1,313, கடலூர் 850, திருநெல்வேலி 648, மதுரை 988, விழுப்புரம் 617, தூத்துக்குடி 678, வேலூர் 526, ராணிப்பேட்டை 551, அரியலூர் 437, கள்ளக்குறிச்சி 437, சேலம் 347, கோவை 292, பெரம்பலூர் 193, திண்டுக்கல் 357, விருதுநகர் 234, திருப்பூர் 120, தேனி 284, திருச்சி 352, தென்காசி 272, ராமநாதபுரம் 339, தஞ்சாவூர் 319, கன்னியாகுமரி 180, நாகப்பட்டினம் 165, திருவாரூர் 241, கரூர் 120 என்ற எண்ணிக்கையில் உள்ளன.
37 மாவட்டங்களில் 23 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. 4 மாவட்டங்கள் 4 இலக்கத்தைத் தாண்டியுள்ளன. சென்னை 5 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. முதன்முறையாக தமிழகத்தில் 37 மாவட்டங்களிலும் தொற்று உறுதியாகியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இதனால் மாவட்ட அளவில் சோதனைகளை அதிகரிப்பது, தொற்றுள்ளவர்களைக் கண்டுபிடிப்பது, தனிமைப்படுத்துவது உள்ளிட்ட கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை நேற்று முன்தினம் தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஆணையாக அனுப்பியிருந்தார். இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் முதல்வருடன் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறைச் செயலாளர், டிஜிபி, காவல் ஆணையர், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகள், அந்தந்த மாவட்டங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகள், ஊரடங்கு நீட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டதாகத் தெரிகிறது.