வெளிநாடுவாழ் தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள்: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் 

வெளிநாடுவாழ் தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள்: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் 
Updated on
1 min read

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க 50 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 29 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாகவும் மத்திய அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கூடுதல் தகவலுக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வரும் வகையில், தமிழகத்தில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ''இந்த வழக்கில் வெளிநாடுகளில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர், எத்தனை விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. வந்தே பாரத் அல்லது வேறு வகையில் கூடுதல் விமானங்கள் இயக்கத் திட்டம் உள்ளதா? நிதியுதவி, தங்குமிடம், உணவு வசதிகள் வழங்கப்பட்டதா? என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது'' எனக் குறிப்பிட்டார்.

அதேபோல, விமானங்கள் தரையிறங்க அனுமதியளிப்பது குறித்து தமிழக அரசின் நிலைப்பாட்டையும் தெரிவிக்கவும் உத்தரவிட்டிருந்தது. கடந்த விசாரணையின்போது, 26,368 பேரின் விண்ணப்பம் நிலுவையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாக வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட மத்திய அரசுத் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், “வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 80 விமானங்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. அதன்படி 50 விமானங்கள் இயக்கப்பட்டு 40 ஆயிரத்து 433 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 29 விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் சிக்கியுள்ள 26 ஆயிரத்து 368 பேர் மீட்கப்படுவர்” என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் பதில் மனு கிடைக்கப் பெறாததால், வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஜூன் 29-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in