

மதுரை மத்திய சிறையில் கைதிகள், காவலர்கள், அதிகாரிகளை கரோனா பாதிப்பில் இருந்து பாதுகாக்க, டிஐஜி பழனி உத்தரவின் பேரில், பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இருப்பினும், மதுரை சிறை கைதி ஒருவர் பேசிய ஆடியோ ஒன்று நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில், ‘ மதுரை மத்திய சிறைக்குள் ஒருவருக்கு கரோனா தொற்று இருக்கிறது.
சிறை நிர்வாகம் அது பற்றி கண்டுகொள்ள வில்லை. முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் முறையாக எடுக்கப்படவில்லை என, குறிப் பிட்டுள்ள அந்த கைதி, இந்த ஆடியோவை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உதவிடுமாறு,’ எதிர்முனையில் பேசிய நபரிடம் வலியுறுத்தியுள்ளார்.
சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ இது தவறான பதிவு. சிறை வளாகத்திற்குள் கரோனா தடுக்க, முறையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது, மதுரை மாவட்டத்தில் பெரும்பாலும் வழக்கு தொடர்பாக யார் கைது செய்யப்பட்டாலும், அவர்களை வெளியூர் கிளை சிறைகளை அடைத்து, தொடர் கண்காணிப்பிற்கு பிறகே இங்கு அடைக்கப்படுகின்றனர்.
தற்போது மதுரையில் கைதாகும் நபர்களை விருதுநகர் சிறையில் தனி அறையில் அடைத்து, கண்காணிக்கப்படுகிறது. 15 நாளுக்கு பின், அவருக்கு தொற்று அறிகுறி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
இந்த நடைமுறை ஊரடங்கு காலத்தில் இருந்தே பின்பற்றப்படுகிறது,’’ என்றார்.