1962 சீனப்போரில் நாட்டுக்காக தனது நகைகளை கழற்றி கொடுத்த ஜெயலலிதாவை நினைவு கூர்கிறேன்: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் ஓபிஎஸ் பேச்சு

1962 சீனப்போரில் நாட்டுக்காக தனது நகைகளை கழற்றி கொடுத்த ஜெயலலிதாவை நினைவு கூர்கிறேன்: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் ஓபிஎஸ் பேச்சு
Updated on
2 min read

நமது நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் பிரதமர், பின்னால் அதிமுக உறுதியாக நிற்கிறது, 1962 சீனப்போரில் நாட்டுக்காக தனது நகைகளை கழற்றி கொடுத்த ஜெயலலிதாவை நினைவு கூர்கிறேன் என அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் ஓபிஎஸ் பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (19.6.2020) காணொலி காட்சி மூலம் இந்திய சீன எல்லை பிரச்சினை தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:

“லடாக்கில் இந்திய-சீன, உண்மையான கட்டுப்பாட்டு எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதிக்க இந்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியதற்காக பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இது மிகவும் சரியான மற்றும் அவசியமான கூட்டமாகும். நாட்டிலுள்ள அனைவரும் இந்திய அரசாங்கத்தின் பின்னால், நமது நாட்டின் எல்லைகளையும், நமது தேசத்தையும் பாதுகாக்க, நாம் அனைவரும் ஒற்றுமையாக நிற்கிறோம் என்பதை நிரூபிக்க நம் அனைவருக்கும் கிடைத்த ஒரு வாய்ப்பாகும்.

லடாக்கின் எல்லைப் பகுதியில், தேசத்துக்காக போராடும் போது, வாழும் சூழ்நிலை அற்ற நிலப்பரப்பில், எல்லைப் பகுதியில், தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த துணிச்சலான 20 இந்திய வீரர்களுக்கு எனது வீர வணக்கத்தை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரதமர், குறிப்பாக கடினமான ஒரு நேரத்தில் நாட்டை வழிநடத்திக்கொண்டிருக்கிறார். கோவிட்-19 தொற்றுநோயை எதிர்கொண்டுள்ள நேரத்தில், தேசத்தை அமைதியாக வழிநடத்துகிற மெச்சத்தகுந்த தலைமையினை ஏற்றுள்ள, பிரதமருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

முன் எப்போதும் இல்லாத நெருக்கடியாக, கோவிட்-19 தொற்றுநோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நமது நாடு ஒருபக்கம் ஈடுபட்டிருக்கும் போது, மறு பக்கம் சீன தரப்பினரின் கடுமையான நடவடிக்கைகள் காரணமாக நாடு ஒரு புதிய சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது. நமது நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில், பிரதமர், இந்திய அரசு மற்றும் நமது பாதுகாப்பு படைகளுக்கு பின்னால் தமிழகமும் மற்றும் அதிமுகவும் உறுதியாக நிற்கின்றன.

இந்தியாவின் எல்லைப்பகுதியில் ஒரு அங்குலம் கூட ஒருபோதும் யாருக்கும் விட்டுக்கொடுக்கப்படாது. எங்களது மதிப்பிற்குரிய தலைவர் அம்மா, தொடர்ந்து வலியுறுத்தியதுபோல, நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு எந்த நிலையிலும் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த அம்சத்தில் எந்த சமரசமும் இருக்க முடியாது.

சமீபத்தில் இறந்த 20 ராணுவ வீரர்களில் ஒருவர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, ஹவில்தார் கே.பழனி தமிழகத்தைச் சேர்ந்தவர். இந்த மாவட்டம் நம் நாட்டின் தென்முனைக்கு அருகில் உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான ஒவ்வொரு இந்தியரும் நாட்டைப் பாதுகாப்பார்கள், மிகச்சிறந்த தியாகம் செய்யத் தயாராக இருப்பார்கள் என்பதையே இவ்வீரரின் மறைவு சரியாக நிரூபிக்கிறது.

அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் போர் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக, அம்மா, தனது சொந்த நகைகளை தாராளமாக நன்கொடையாக வழங்கியதை, நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

பிரதமர் இந்த நெருக்கடியான நிலைமையைக் கையாள்வதில் மிகுந்த புத்திசாலித்தனத்தையும் உறுதியையும் வெளிப்படுத்தியுள்ளார். பிரதமர், இந்திய அரசு மற்றும் நமது பாதுகாப்புப் படைகள் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழு ஆதரவளிக்கிறோம். இந்த நெருக்கடியை எதிர்கொள்வதில் பாதுகாப்புத் துறை அமைச்சரும் மிகுந்த துணிச்சலுடன் செயல்பட்டுவருகிறார்.

பிரதமரின் புத்திசாலித்தனமான மற்றும் ஊக்கமளிக்கும் தலைமையின் கீழ் நமது நாடு, தொற்றுநோயால் ஏற்படும் சவால்களை மட்டுமல்ல, நம்முடைய எதிரிகள், எவருடைய முயற்சிகளையும் நிச்சயமாக வெல்லும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்தக் கூட்டத்தை கூட்டி எங்கள் கருத்துக்களைத் கேட்டறிந்த பிரதமருக்கு நான் மீண்டும் நன்றி கூறுகிறேன்”.

இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in