

மதுரை சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆள்மாறாட்டம் செய்து, சொத்துப் பதிவு மோசடி நடைபெற்றது தொடர்பான வழக்கில் சார் பதிவாளர் அலுவலகக் கண்காணிப்பு கேமரா பதிவுகளை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை பழங்காநத்தத்தில் உள்ள இணை சார்பதிவாளர் அலுவலகம் எண் 4-ல் ஆள்மாறாட்டம் செய்து வேறு ஒருவரின் சொத்து மோசடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட விஜய் ஆனந்த் முன் ஜாமீன் கோரித் தாக்கல் செய்த மனு, நீதிபதி தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் மோசடிப் பதிவு தொடர்பாக விசாரிக்க சார் பதிவாளர் அலுவலக வீடியோ பதிவுக் காட்சிகள் கேட்கப்பட்டன. ஆனால் வீடியோ கேமரா பதிவுகளைச் சேமித்து வைப்பதில்லை என்று கூறி கேமரா பதிவைத் தர சார் பதிவாளர் மறுத்துவிட்டார். கேமரா பதிவு இல்லாமல் விசாரணையை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்ல முடியாது என்று வாதிடப்பட்டது.
இதையத்து சார் பதிவாளர் அலுவலகக் கண்காணிப்பு கேமரா பதிவுகளை வருகிற 25-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் பதிவுத் துறைத் தலைவர் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.