மூச்சுத்திணறலால் இறந்தவரின் உடலுடன் கோவில்பட்டிக்கு வந்த 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

மூச்சுத்திணறலால் இறந்தவரின் உடலுடன் கோவில்பட்டிக்கு வந்த 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
Updated on
1 min read

கோவில்பட்டி காவல் சோதனைச் சாவடிக்கு மூச்சுத்திணறல் காரணமாக இறந்தவரின் உடல் உடன் வந்த 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

நாசரேத் அருகே மூக்குப்பீறியைச் சேர்ந்தவர் ராஜன்(65). கோயமுத்தூரில் வியாபாரம் செய்து வந்த இவர், அங்கேயே குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் மூச்சுத்திணறல் காரணமாக கோயமுத்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜன் நேற்று மாலை உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸில் ராஜனின் உடலை எடுத்துக்கொண்டு நாசரேத் அருகே மூக்குப்பீறி கிராமத்துக்கு வந்தனர். இதில் ஆம்புலன்ஸில் 3 பேரும், 3 கார்களில் 17 பேரும் என 20 பேர் வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி காவல் சோதனைச் சாவடிக்கு வந்தபோது, அங்கிருந்த போலீஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் உரிய அனுமதியின்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு வட்டாட்சியர் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் மோகன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வந்தனர்.

அவர்களது அறிவுரையின்படி கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் ராஜனின் உடல் உறவினர்கள் முன்னிலையில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

அதன் பின்னர் 20 பேரும் பாதுகாப்புடன் திருச்செந்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்குள்ள தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in