சாதியப் பாகுபாடும் இனப் பாகுபாடே: மதுரையில் நடந்த போராட்டத்தில் இணைய வழியாகப் பங்கேற்ற வைகோ, திருமாவளவன்

சாதியப் பாகுபாடும் இனப் பாகுபாடே: மதுரையில் நடந்த போராட்டத்தில் இணைய வழியாகப் பங்கேற்ற வைகோ, திருமாவளவன்
Updated on
1 min read

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் எனும் கறுப்பினத்தவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும் கறுப்பு உயிர்களும் முக்கியமே இயக்கம் (Black Lives Matter Movement) என்ற அமைப்பு சார்பில் உலகளாவிய கூட்டங்கள் நடந்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக இன, நிற, மத, சாதி வெறிக்கு எதிராக உறுதியேற்கும் நிகழ்ச்சி இன்று மாலை 4.30 மணிக்கு மதுரை மக்கள் கண்காணிப்பக அலுவலகத்தில் தொடங்கியது. அமெரிக்காவில் நிகழும் இனவெறிப் பாகுபாட்டிற்கு எதிராக நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் 'சாதியப் பாகுபாடும் இனப்பாகுபாடே' என்ற கண்டனக் குரல் முழக்கமிடப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு மக்கள் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற இணையவழி நேரலை நிகழ்வும் நடந்தது.

இணையவழி இரங்கல் அரங்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஐவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், கொளத்தூர் மணி, தியாகு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு உள்ளிட்ட பலர் தலா 5 நிமிடம் உரையாற்றுகிறார்கள். இந்த நிகழ்வு இன்று இரவு வரையில் நீளும் என்று ஹென்றி திபேன் தெரிவித்தார்.

முன்னதாக நடந்த கண்டன முழக்கத்தில், தமிழ்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.தா.பாண்டியன், தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கனியமுதன், தமிழ் தேசியப் பேரியக்கத்தைச் சேர்ந்த ராசு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முஹம்மது அப்பாஸ், ஆரோக்கியமேரி, மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன், திராவிடர் கழகம் திலீபன் செந்தில் மற்றும் சமூக ஆர்வலர்கள், மக்கள் கண்காணிப்பகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in