Last Updated : 08 Jun, 2020 03:08 PM

 

Published : 08 Jun 2020 03:08 PM
Last Updated : 08 Jun 2020 03:08 PM

தூய்மைப் பணியாளர்களுக்கு முகக்கவசம், கையுறை: மதுரை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்ற கிளை பாராட்டு

மதுரையில் அனைத்து துப்புரவுப் பணியாளர்களும் பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியாற்றுவதை உறுதி செய்த மதுரை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும், தூய்மைப் பணியாளர்கள் முகக்கவசம், கையுறை அணிவதை உறுதிப்படுத்துவது தொடர்பாக மதுரை கிளையின் வரம்பிற்குட்பட்ட அனைத்து மாநகராட்சிகளுக்கும், நகராட்சிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை சொக்கிகுளத்தைச் சேர்ந்த சத்யமூர்த்தி," கொரோனா தொற்று காலத்தில் களத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள், ஊடகப் பணியாளர்கள், வருவாய் அலுவலர்கள், அரசு மற்றும் அரசு சாராத தன்னார்வலர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடலை முழுமையாகப் பாதுகாக்கும் வகையிலான பாதுகாப்பு ஆடைகள், முகக் கவசங்கள், மாஸ்க்குகள், கையுறைகள், ரப்பர் காலணிகள் உள்ளிட்டவற்றை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், மாநகராட்சி தூய்மை கண்காணிப்பாளர், ஒரு நாளைக்கு 3 முறை ஆய்வு செய்து தூய்மைப் பணியாளர்கள் முகக்கவசம், கையுறை அணிவதை உறுதி செய்ய வேண்டும். இந்த உத்தரவை மதுரை மாநகராட்சி மட்டுமல்லாது, உயர் நீதிமன்ற மதுரை கிளையின் வரம்பிற்குட்பட்ட திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகர்கோவில் ஆகிய மாநகராட்சிகளிலும் நடைமுறைபடுத்த உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மதுரை மாநகரப் பொறியாளர் வீடியோ கான்ஃபரன்ஸ் வழியாக நீதிபதிகள் முன்பாக ஆஜராகினார். மேலும் அரசுத்தரப்பில் "பாதாள சாக்கடையை தூய்மை செய்யும் ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில் அது தொடர்பான சுற்றறிக்கை மதுரை கிளையின் வரம்பிற்குட்பட்ட அனைத்து மாநகராட்சிகளுக்கும், நகராட்சிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

முறையாகக் கண்காணிக்காத தூய்மை கண்காணிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில், "மதுரை மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளர்கள் தற்போது போதிய பாதுகாப்பு உபகரணங்களுடன் தான் பணியாற்றுகிறார்கள்" எனத் தெரிவித்தார். அவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மதுரை மாநகராட்சிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

மேலும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வரம்புக்கு உட்பட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் இந்த நிலையை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக்கூறி வழக்கு விசாரணையை ஜூன் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x