

தமிழக சிறைகளில் உள்ள கைதிகள் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கடலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதி சரவணன் என்பவருக்கு ஆறு வாரம் பரோல் கேட்டு அவருடைய மனைவி சங்கீதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி கிருபாகரன் மற்றும் நீதிபதி ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தற்போது சிறைகளில் கரோனா தொற்று வேகமாக பரவி வருவதாகவும் சிறைக்கைதி சரவணனுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழக சிறைகளில் இதுவரை எத்தனை கைதிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைதிகளில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, எத்தனை பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறித்து ஒரு வார காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.