கரோனா பாதிப்பு; தமிழக மொத்த எண்ணிக்கையில் சென்னையில் 66% - அமைச்சர்கள்,மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

கரோனா பாதிப்பு; தமிழக மொத்த எண்ணிக்கையில் சென்னையில் 66% - அமைச்சர்கள்,மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
Updated on
1 min read

சென்னையில் தீவிரமாக பரவி வரும் கரோனா பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள், சென்னையின் பொறுப்பு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் சென்னையின் நிலை மிக மோசமாக உள்ளது. சென்னையில் 972 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 14,798 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 15,770 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய 1,162 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 83.72 சதவீதத் தொற்று சென்னையில் (972) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 23,495-ல் சென்னையில் மட்டும் 15,570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 66.26 சதவீதம் ஆகும். சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழக தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உயிரிழந்த 184 பேரில் சென்னையில் மட்டுமே 138 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் சென்னையின் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதியில் நீண்ட நாள் நோய், சர்க்கரை, நீரிழிவு போன்ற நோயுள்ளவர்கள், வயதானவர்களைக் கண்டறிந்து 7 நாட்கள் அரசு முகாமில் தங்கவைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பெருநகரங்களில் சென்னை மட்டும் 15,000 என்ற தொற்று எண்ணிக்கையைக் கடந்துள்ளது. சென்னையின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தின் மொத்த மாவட்ட எண்ணிக்கையை விட அதிகம்.

சென்னையின் குடிசைப்பகுதிகளும் அடர்த்தியான மக்கள் எண்ணிக்கையும் கரோனா தொற்று பரவலுக்கு காரணம் என அரசு சொல்கிறது. இந்நிலையில் சென்னையின் கரோனா தொற்று சமூக பரவலை நோக்கி செல்கிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சென்னையின் தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநகராட்சி அதிகாரிகள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் இன்று காலை இந்தக்கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், விஜயபாஸ்கர், கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ், சிஎம்டிஏ அதிகாரி கார்த்திகேயன், டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், சென்னைக்கான மண்டல வாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு எடுக்கப்படும் முடிவுகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in