Published : 30 May 2020 05:14 PM
Last Updated : 30 May 2020 05:14 PM

தமிழக சட்டக்கல்லூரிகளில் ஆன்லைனில் தேர்வுகள் நடத்துவதால் மாணவர்கள் சிரமம்: சட்டத்துறை அமைச்சருக்கு தமாகா மனு

தமிழக சட்டக்கல்லூரிகளில் ஆன்லைனில் தேர்வுகள் நடத்துவதால் மாணவர்கள் சிரமம் அடைவதாக சட்டத்துறை அமைச்சருக்கு தமாகா மனு அனுப்பியுள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ் கோவில்பட்டி நகர தலைவர் கே.பி.ராஜகோபால் தமிழக சட்டத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில், ஊரடங்கு அமலில் உள்ளதால் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன.

இதில், சில பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் நெட்வொர்க் சரிவர கிடைக்காததால் ஆன்லைனில் பாடங்களை கவனிப்பதில் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது.

இதே போல், தமிழக சட்டக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான இன்டர்நெல் மதிப்பெண்ணுக்காக அசைமென்ட் சமர்ப்பித்தலும், அதற்குரிய ஆசிரியர்களின் கேள்விகளும் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. இதனை எதிர்கொள்வதில் கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

அவர்களுக்கு சரிவர நெட்வொர்க் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். கரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பெற்றோர் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். இதனால் மாணவர்களும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், நெட்வொர்க் பிரச்சினை காரணமாக அசைமென்ட் முறையாக சமர்ப்பிக்க முடியாமலும், ஆசிரியர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமலும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனால் மாணவர்களுக்கு மதிப்பெண் குறையும் என்ற பயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, கொடிய நோய் தொற்று காலத்தில் மாணவர்களை மன ரீதியாக பாதிக்கும் ஆன்லைன் தேர்வுகளை தவிர்த்து, கல்லூரி தொடங்கியவுடன் அதற்குரிய அசைமென்ட் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் மாணவர்களின் மதிப்பெண்ணும் குறையாது, என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x