தனியார் நிலத்தில் உள்ள கனிமங்களும் அரசுக்கு சொந்தமானதே: உயர் நீதிமன்றம் கருத்து

தனியார் நிலத்தில் உள்ள கனிமங்களும் அரசுக்கு சொந்தமானதே: உயர் நீதிமன்றம் கருத்து
Updated on
1 min read

தனியார் நிலங்களில் உள்ள கனிமங்களும் அரசுக்கு சொந்தமானது. அதன் வருவாய் அரசுக்கு சேரும் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியைச் சேர்ந்த உறங்காபுலி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

வாகைகுளத்தில் பட்டா நிலத்தில் உபரி மணல் எடுக்க விதுநகர் ஆட்சியர் மே 13-ல் உரிமம் வழங்கியுள்ளார். இந்த உரிமத்தை பயன்படுத்தி பொக்லைன், ஹிட்டாச்சி உள்ளிட்ட கனரக வாகனங்களை பயன்படுத்தி கிருதுமால் நதியின் ஆற்றுப்படுகையில் மணல் எடுத்து வருகின்றனர்.

250 லோடு மட்டுமே மணல் எடுக்க அனுமதி பெற்றுள்ள நிலையில் 25 அடி ஆழம் தோண்டி 2000 லோடு மணல் எடுத்துள்ளனர். இந்த விதிமீறலை தடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே வாகைக்குளம் கிராமத்தில் பட்டா நிலத்தில் உபரி மணல் மற்றும் சவுடு மணல் எடுக்க அளித்த வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. தனியார் நிலமாக இருந்தாலும் அதிலுள்ள கனிமவளங்கள் அரசுக்கு சொந்தமானது. அதன் வருவாய் அரசை சென்றடைய வேண்டும்.

ஆனால் அரசுக்கு வர வேண்டிய வருவாய் தனியாருக்கு செல்கின்றன. இந்த மனு தொடர்பாக அரசு பதிலளிக்க வேண்டும் என்று கூறி விசாரணையை 2 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in