

கரோனா பிரச்சினையைக் கையாளுவதில் மத்திய, மாநில அரசுகள் திறமையில்லாத அரசுகளாக உள்ளன என்று கார்த்தி சிதம்பரம் எம்பி குற்றஞ்சாட்டினார்.
தென்காசி நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் பழனி தலைமையில் இன்று நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் நிவாரண உதவி வழங்கினார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தற்போது வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் பிரச்சினையை எவ்வாறு கையாளுவது என்பது பற்றி தெரியாத, திறமையில்லாத அரசாக மத்திய, மாநில அரசுகள் உள்ளன.
ஏழை, எளிய மக்களின் வேதனையத் தீர்க்க போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இந்த காலத்தில் அனைத்து குடும்பத்துக்கும் தலா ரூ.7500 வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியும் இன்னும் அதனை செயல்படுத்த முடியாத அரசாக பாஜக அரசு உள்ளது.
வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் பணிபுரியும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 4 கோடி பேர் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் நிலை பல இடங்களில் ஏற்பட்டது.
அனைத்துக் கட்சிகளை இணைந்து குழு அமைத்து கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுக்கொண்டு இருக்கும் அரசாக உள்ளது. இனி ஊரடங்கு தேவையா என நிபுணர் குழு, மருத்துவ குழுக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.