நீதிபதிகளை விமர்சித்து பேச்சு; ஏன் அவமதிப்பு வழக்கை சந்திக்கக்கூடாது?- ஆர்.எஸ். பாரதிக்கு அரசு வழக்கறிஞர் நோட்டீஸ் 

நீதிபதிகளை விமர்சித்து பேச்சு; ஏன் அவமதிப்பு வழக்கை சந்திக்கக்கூடாது?- ஆர்.எஸ். பாரதிக்கு அரசு வழக்கறிஞர் நோட்டீஸ் 
Updated on
1 min read

நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசியதால், ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க கூடாது என்பது தொடர்பாக விளக்கமளிக்க திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பட்டியலின மக்கள் குறித்தும், நீதிபதி பதவிகள் கிடைத்தது குறித்தும் பேசும் போது நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என பேசி இருந்தார்.

ஆர்.எஸ்.பாரதியின் இந்த சர்ச்சை பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ட்விட்டரில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார், அவருக்கு எதிராக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், கடந்த 23 ஆம் தேதி ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். கைதான ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் ஆர்.எஸ்.பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு வழக்கறிஞர் ஆண்டனி ராஜ் என்பவர் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனிடம் இன்று மனு அளித்தார்.

அவரது மனுவில், ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு, நீதிபதிகள் தங்கள் திறமையால் அல்லாமல் அரசியல் கட்சிகளின் ஆதரவாலேயே அந்த பதவிக்கு வருகிறார்கள் என்பதை போல் இருந்தது. இது ஒட்டுமொத்த நீதித்துறையின் மாண்பை இழிவு படுத்தும் வகையில் இருப்பதால் அவர் மீது வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்”. எனக்கோரியிருந்தார்.

இந்த மனுவை வீடியோ கான்ப்ரென்ஸ் மூலமாக இன்று விசாரித்த அரசு தலைமை வழக்கறிஞர், நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசியது தொடர்பாக, ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க கூடாது என்பது குறித்து 2 வாரங்களில் பதிலளிக்க ஆர்.எஸ்.பாரதிக்கு உத்தரவிட்டார்.


--

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in