

தேவாலயங்கள், கோயில்கள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
கரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் உடனடியாகத் திறக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர், கோட்டாட்சியர் விஜயாவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
மனுவில், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பிருந்தே கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில், வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன.
அரசு டாஸ்மாக் மதுக்கடைகளும் திறக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் மதுபான பாட்டில்களை வாங்கி செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படவில்லை.
எனவே அரசு பக்தர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு வழிபாட்டுத் தலங்களைத் திறப்பதற்கு அனுமதிக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளனர்.
இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் அணி மாநில அமைப்பாளர் பெஞ்சமின் பிராங்கிளின், சட்டமன்ற தொகுதி செயலாளர் முருகன், மாவட்ட துணை செயலாளர் பாஸ்டர் மோகன், நகர துணை செயலாளர் பாண்டி வளவன், ஒன்றிய செயலாளர் மாடசாமி, மாவட்ட செய்தி தொடர்பாளர் மனுவேல், கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை அமைப்பாளர் அமல்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.