கன்னியாகுமரியில் விவசாயப் பயன்பாட்டுக்காக நீர்த்திறப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கன்னியாகுமரியில் விவசாயப் பயன்பாட்டுக்காக நீர்த்திறப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன அமைப்புகளுக்கான நீர்த்திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனம் அமைப்புகளில் உள்ள பாசனத்திற்காக பேச்சிப்பாறை பெருஞ்சாணி சித்தார்-1 மற்றும் 2 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு பாசனத்திற்கு ஜூன் 8-ம் தேதி முதல் 2021- பிப்ரவரி 28-ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 850 கன அடி/ வினாடிக்கு பேச்சிப்பாறை பெருஞ்சாணி சித்தார்- 1 மற்றும் 2 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன பகுதிகளில் 79 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் விவசாயப் பெருமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in