கரோனா நிவாரண நிதி வசூல் செய்யப்படும் தொகை: மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் ஒதுக்கக் கோரி வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

கரோனா நிவாரண நிதி வசூல் செய்யப்படும் தொகை: மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் ஒதுக்கக் கோரி வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
Updated on
1 min read

கரோனா தொற்று பரவலை தடுக்க வசூலிக்கப்பட்ட நிவாரண தொகையில் 4 சதவீதத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த வசூலிக்கப்பட்ட நிவாரான நிதியில் 4 சதவீதத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்க கோரி, பார்வையற்றோருக்கான தேசிய கூட்டமைப்பு மற்றும் டிசம்பர் 3 இயக்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், “மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் அரசு வேலை வாய்ப்பில், அவர்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. சாதாரண மனிதர்களுடன், மாற்றுத் திறனாளிகளை ஒப்பிட முடியாது.அவர்களுக்கு அதிகளவில் அடிப்படை தேவைகள் உள்ளது.

கரோனா தொற்று பரவலை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக வேலை வாய்ப்பை இழந்து தவிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி போதுமானதல்ல. மத்திய - மாநில அரசுகள், கரோனா தடுப்புக்காக பொது மக்களிடம் இருந்து வசூலித்துள்ள நிதியில் 4 சதவீதத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்க உத்தரவிட வேண்டும்”. என மனுவில் கோரியுள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வு, ஜூன் 2ம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in